Tuesday, August 30, 2016

இதயமெனும் கண்ணாடி

தெளிவான தண்ணீரில் தெரியும் பகலவனின் பிம்பத்தினைப்போல,
இதயக் கண்ணாடியில் தெரியக்கூடிய சக்தியானது - 
சகுணப் பிரம்மம். 
ஆனால் இந்தக் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது!
ஏனெனில் மாசு படிந்த கண்ணாடியில் தெரியும் பிம்பமானது சரியான ஒன்றாக இருப்பதில்லை.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்முடைய புறக் கண்ணாடிகளில் அழுக்கு படிந்தாலும் தெரியும் பிம்பமானது மாறுவதில்லை. என்ன மங்கலாகத் தெரியும், அல்லது சில இடங்களில் தெரியாமல் போகும்.



இதயக் கண்ணாடியில் படிந்த மாசு என்பது - நான்/எனது என்பது போன்ற எண்ணங்கள். இந்த மாசினைத் துடைக்காவிட்டால், இதயக் கண்ணாடியில் - எந்த பரமனின் துகளாக இந்த ஜீவன் இருக்கிறதோ - அந்த பரமனின் சகுண பிம்பத்தினைக் காண இயலாமல் போகிறது. அதற்கு பதிலாக அவித்தையினால்  தன் வயப்படுதலே நிகழ்கிறது. இதனால் தன் செயல்கள் எல்லாம் தன்னாலேயே நடக்கின்றதென நினைக்கின்றோம். உண்மையில் நம்மை ஆட்டுவிக்கும் சக்தியின் கையில் நாம் வெறும் கருவிதான் என்பதனை உணர முடிவதில்லை.

சுஃபி கவிஞர் ரூமியும் சொல்லுவார்:


இந்த மாசானது பிறக்கும்போதே இந்த ஜீவனோடு இணைந்தவிட்ட ஒன்று. சக்தியினால் பிறப்பானது நிகழச் செய்யப்பட்ட சித்து வேலை. இதனால் தான் சக்தி அன்னையை உலகத்தை ஈன்ற அன்னையாகச் சொல்கிறோம். அவள் அந்த மாயையினை ஏற்படுத்தியதனால் உலகில் உழல்கிறோம்.



இந்த கண்ணாடியை என்ன செய்வது?

இந்த கண்ணாடியில் மேல் படிந்த மாசினால் தெரியும் பிம்பமானது - நான், எனது போன்ற எண்ணங்களயே தோற்றுவிக்கிறது. ஆகையால் இந்த கண்ணாடியைப் புறந்தள்ளி வைக்க வேண்டியதாகிறது. மாயையினால் ஏற்படும் பிம்பத்தினை ஒதுக்க வேண்டியதாகிறது. 

விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் - எவ்வாறு இந்த கண்ணாடியை புறந்தள்ளி வைத்து, ஜீவனானது உண்மையில் பரமனின் பிம்பம் என்பதனைக் கண்டறியும் வழியினை 16 சுலோகங்களில் சொல்கிறார். 

கண்ணாடியை புறந்தள்ளி வைப்பதினை - மனதினைக் கலைப்பது எனவும் சொல்லலாம். ஆழ்நிலை தூக்கத்தில் - கனவுகள் இல்லாத நிலையில் மனமானது கலைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். அந்நிலையில் இருந்து வெளி வரும்போது, மீண்டும் மனமானது செயல்படத் தொடங்குகிறது.

வசிஷ்ட மாமுனி இராமருக்கு சொல்லும் உபதேசத்தில் இருந்து:
ஓ இராமா! உடல், உணர்வு முதலான மனதில் தோற்றுவிக்கப்பட்ட கூற்றுகள் உண்மையானவையல்ல. உண்மையில் ஆன்மாவனது இதுபோன்ற கூற்றுகளால் குறுக்கப்பட்டவையல்லை. மாற்றாக, சுதந்திரமாக எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பது. 

ஆகையால், நான் எனக் கண்ணாடியில் தெரிவதை நீக்கிட, நான் என்பது என் உடல் அல்ல, என் மனம் அல்ல. நான் அறிந்த எதுவுமே அல்ல, ஆனால் எல்லாமுமான நீ, நீ மட்டுமே - என்பதுவே பிறப்பின் இலக்கினை அடைதல் ஆகும்.

3 comments:

  1. எனக்கெல்லாம் எத்தனை பிறவி எடுக்கணுமோ! :(

    ReplyDelete
  2. மீண்டும் எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது, ஜீவா!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றிகள் கீதாம்மா!

      Delete