Friday, January 08, 2016

குறிப்பினை பகர்ந்திடு குமரேசா

அகமதில் நின்முகமது அனுதினம் நிலைத்திட
அறுமுகவேளே அருள்வாயே

இகமதில் துயரது இனியேனும் வாராது
இவனுக்கினி அருள்வாயே

உலகினில் உழல்வோருக்கு ஒருபகை அண்டாது
தலைமுதல்கால்வரை காப்பாயே

பலகணி வழிதனில் நினதொளி படர்ந்திட
பனிமுகம் தெரிந்திட அருள்வாயே

வழிதனில் விழிவைத்து எதிர்பார்த்திடும் அன்பரது
விழிதனில் தெரிந்தே அருள்வாயே

எனதிருசெவி தனிலும்  ஓம்கார நாதமெனும்
உனதொலி ஒலித்திட அருள்வாயே

நாசிவழி சுவாசம்தனை ஒருநிலைப்படுத்தி
வாசியோகம் செய்ய அருள்வோனே

பாயும் மனமதை சுழிதனில் அடக்கிடும்
மாயம் தன்னை அருள்வாயே

குணமது மூன்றும் குறையின்றி சமமாகிடும்
குறிப்பினை பகர்ந்திடு குமரேசா.

4 comments:

  1. குமரனின் அழகு சந்தத்தில் குழைந்து குழைந்து தவழ்கிறது. ராகம் தாளம் சேர்ந்து விட்டால் மனமும் பாடலில் அமிழ்ந்து நழுவும்.

    இலக்கணச் சிறப்பும் சேர்ந்து பாடலின் சுகத்தில் ஐக்கியமாவதை இன்று தான் உணர்ந்தேன்.

    ReplyDelete
  2. நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கீதாம்மா!

      Delete