Monday, June 30, 2014

சுந்தர காண்டம் : ஊர் தேடு படலம்

1. என்னென்று சொல்வது இலங்கை நகர் அழகை!
பொன்னாலும் மணியாலும் இரத்தினங்களாலும்
மின்னும் கற்களாலும் இழைக்கப்பட்டு பளபளவென
கண்ணைப் பறித்து ஜொலித்தது.

2. மக்கள் கூட்டம் எங்கும் நிரம்பி வழிந்தது.
தேவர்கள் யாவரும் இங்கே சேவகம் புரிந்தனர்.
யானைகளும் குதிரைகளும் இலங்கைச் சேனையில்
மட்டுமே இருப்பதுபோல் தோன்றியது.

3. வாத்தியங்கள் பலவும் இசை முழங்கின.
நாலாபுறமும் முரசு ஒலித்தது.
யானைகளின் பிளிறல், அலைகளின் ஓசை,
இனிய இசையான பெண்களின் குரலும்,
காற் சிலம்பும் ஒலித்தது.

4. இலங்கைப் படைகளின் எது பெரிது?
விற்படையா வேற்படையா வேல்படையா மல்யுத்த
வீரர் படையா, அல்லது ஏனைய ஆயுதப் படையா?
அன்பு இராமனிடம் எதுவென்று சொல்வேன்
என வியந்தான் அனுமன்.

5. இரவு நேர வானத்தில் மின்னிய விண்மீன்கள்:
அனுமனை வாழ்த்தி தேவர்கள் தூவிய பூமழை
இராவணனுக்கு பயந்து மண்மீது செல்லாமலும்,
திரும்பிச் செல்ல இயலாமலும் இடையே
திண்டாடு கின்றனவோ?

6. கதிரவன் இராவணனிடம் பயந்துதான் நகரின்
மதிலின் உள்ளே நுழைவதில்லை என்பதைவிட, இம்
மதிலைக் கதிரவனும் தாண்டுவது கடினம்
என்பதே காரணமாக இருக்க வேண்டும்.



7. முன்னூறு வெள்ளம் வீரர் புறம் இரண்டிலும்
முனைப்புடனே புரிந்தனர் மதிற்காவல்.
எண்ணற்ற ஆயுதங்களை தாங்கிய அரக்கர் இவரோடு
வீணாய்ப் போர் புரியாமல் மதிலைத் தாவுவதே உசிதம்
என நினைத்தான் அனுமன்.

8. மதிலருகே சென்ற மாருதியை வழி மறித்தனள்
மாது இலங்காதேவி - "யாரடா நீ"  என்றே வினவி.
அனுமனோ நயமாய் "ஊரைப் பார்க்க ஆசை" என்றான்.
"முப்புரம் எரித்த சிவனும் இப்புறம் வர அஞ்சிட,
குரங்கான நீ எம்மாத்திரம்? ஓடிப்போ" என்றாள் அவ்வரக்கி.

9. இருவருக்கும் பேச்சு முற்றி கைகலப்பாயிற்று.
இறுதியில் அனுமன் விட்டான் பலமான குத்தொன்று.
அதில் அரக்கியும் மூர்ச்சையானள். பின் தெளிந்து,
அனுமன் யாரென்றும், தன் மதிற்காவல் தொழிலானது
அவனால் நிறவு பெற்றதையும் உணர்ந்து,
அவனை நகருக்குள் செல்ல அனுமதித்தாள்.

10. ஒவ்வொரு மலரிலும் தேனினை சேகரிக்கும்
வண்டு போல நகரில் ஒவ்வொரு இடமாய்
சென்று ஆராய்ந்தான். ஆங்கே கும்பகர்ணன்,
விபீஷணன், இந்தரஜித் முதலானோர்
மாளிகைகளை துழாவிச் சென்றான்.

11. நகரமே உறங்கிக் கொண்டிருக்கையில் அனுமன் மட்டும்
உறங்காமல் சீதா பிராட்டியைத் தேடினான்.
பெண்கள் இருக்கும் இடமெல்லாம், அங்கு சீதையைக்
காண்போமா என்று ஏங்கித் தேடினான்.

12. இறுதியில் இராவணனின் மாளிகையை அடைந்து
இனிதே உறங்கும் இராவணனைக் கண்டதும் கோபத்தில்
இவனை இப்படியே கொன்றால் என்ன? என நினைத்தான்.
பின்னார் ஆராய்ந்து அது தவறென்று தெளிந்தான்.

13. அங்கும் சீதையைக் காணமல் வருந்தினான்.
ஒருவேளை கொன்றானோ, இல்லை தின்றானோ?
ஒருவரும் எட்ட முடியாத இடத்தில் தான்
சிறை வைத்தானோ? என புலம்பினான்.

14. நல்வினை யாவும்  நீங்கியது, எனவே யானும்
அல்லல் அடைந்தேன் அன்னையைக் காணாமல்.
இல்லை இனிமேல் நன்மை! என மனம் உடைந்தான்.
அரக்கன் இராவணனை அடித்துக் கேட்கலாமோ
அன்னை இருக்கும் இடத்தை?

15. இனி எப்படி என் இனிய இராகவன் திருமுகம்
காண்பேன்? இப்போதே இலங்கையை தீக்கிரையாக்கிவிட்டு
தானும் உயர் துறப்பதே மேல் என்று
எண்ணுகையில் மலர்வனம் ஒன்றைக் கண்ணுற்றான்.

1 comment:

  1. வணக்கம்
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete