Monday, June 23, 2014

சுந்தர காண்டம் : கடல் தாவு படலம்

வாழ்த்து
அன்பெனும் அமுதைப் பொன்னெனப் பூண்டவன்
தன்மனம் முழுதிலும் இராமனை நிறைத்தவன்
அகிலமும் அவனை அனுமனெனப் போற்றிட
அன்பனின் அருமையைச் அடியேனும் சாற்றுவேன்.

கடல் தாவு படலம்
1. அன்பர் அனைவரின் விடைதனைப்பெற்று
அனுமன் பெற்றனன் பேருருவம்!
விண்வரை உயர்ந்தவன் இந்திர உலகத்தைக்
கண்டு ஐயுற்றான் இலங்கை இதுதானோ என்று;
பின் தெளிந்தான் இலங்கை இதுவல்ல வென்று.

2. பின்னர் கண்டனன் இலங்கை மூதூர் நகரை.
பொன்மதில்கள், கோட்டைகள், மாட வீதிகள்
எனப்பல கண்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்
அனுமனும் ஆகா வென்றே .

3. மூதூர் நோக்கி கால்களை அழுத்தி
வானில் எழும்பியபோது மகேந்திர
மலையோ பாவம் அழுந்திப் போனது அடியே.
மலையின் வயிறு பிதுங்கி அங்கிருந்த
மலைப்பாம்புகள் யாவும் வெளியே வந்து விழுந்தன.

4.  வானில் அனுமன் பறந்த காட்சி :
வால் எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி
கழுத்தினை சுருக்கி கை நீட்டி விசைத்தான்.
விண்ணவரும் முனிவரும் வாழ்த்த விரைவாய்
விண்ணிலே காற்றைக் கிழித்துப் பறந்தான்.
முன்னம் பரந்தாமன் காலால் அளந்த உலகை
அனுமன் வாலால் அளந்தானோ என
வானோர் மருண்டனர்.

5. காலனின் கயிற்றுக்கு இதுவரை இலங்கை
செல்லவே அச்சம்; ஆனால் இப்போது இல்லை.
ஏனெனில் தலைவனாம் அனுமனின் வாலின்
பின்னால் ஒளிந்து கொண்டு செல்லலாமே!

6. வான்வெளியை ஊடுறுவிப் பறந்த வேகத்தில்
வானவர்கள் ஆங்காங்கே பறந்து வந்த
விமானங்களோ அந்தோ ஒன்றோடு ஒன்று
விரைவாய் மோதி நசுங்கி வீழ்ந்தனவே!

7. இவன் பறந்த வேகத்தைக் கண்டு
இந்திரனும் வியந்தான் - ஆகா, இவ்வேகத்தில்
இலங்கை மட்டும் தான் என்னே?
இன்னுமும் பலதூரம் செல்வான் என்றான்!

8. ஆழ்கடலில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலம் முதலான
ஆபத்தான மீன்கள் எல்லாம் அந்தோ
அனுமனின் காற்று வேகத்தை தாக்குப் பிடிக்காமல்
தண்ணீரிலேயே மடிந்து மிதந்தனவே.

9. தடக்கை இரண்டையும் காற்றினில் செலுத்திப் பறக்க
தடக்கை இரண்டிலும் இருப்பது யாரோ?
தடக்கை இரண்டையும் இயக்க இருப்பது
சுடரொளி இராமனும் இலக்குவனும் ஆமே.

10. கடலின் மேலே விறையும் பாதையின் குறுக்கே
கடலினில் எழுந்தது மைந்நாகமலை.

அடடா இதுவென்ன தடை? என்று
அனுமனும் தன் காலினால் உதைத்திட
அம்மலையும் கடலினில் குப்புற வீழ்ந்தது.

அதன்பின் சிறு மானிட உருவம் கொண்டு,
அன்போடு உபசரித்து, இம்மலையில்
"இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லவும்" என்றது.

11. அனுமனும் அன்பினை மெச்சினான்.
அம்மலை விருந்துண்டுச் செல்ல வேண்டிட,
அனுமனோ, எண்ணிய கருமம் ஈடேறும் வரை
உண்ணேன் எனும் விரதம் தனை உரைத்தான்.
பின் திரும்பி வருங்கால் ஏற்பேன் என்றான்.


12. அடுத்து அனுமனின் வலிமைக்கு ஓர் சோதனை:

தக்கனின் மகளாம் சுரசையை
அரக்கி வடிவினில் அனுப்பினர் தேவர்.
இது மலையா? கடலா?
அல்லது மலை போன்றெழும் கடலா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
பிளந்த வாயில் "நீயாக வந்து விழுவாய்" என்றாள்.

அனுமனோ மிகச் சிறிய உருவம் கொண்டு,
கண் இமைக்கும் நேரத்தில் செவிக்குள் புகுந்து
வாய் வழியே வெளியே வந்தான்.

அஞ்சா நெஞ்சன் அனுமனனின் வேகத்தை
மெச்சி வாழ்த்தி வழி அனுப்பினர் தேவர் முதலானோர்.

13. முதலிரண்டு தடைகளும் அன்பால் என்றால்
மூன்றாவது தடையோ பகையால் வந்தது:

திடீரென கடலில் நடுவே எழுந்தனள்
அங்காரதாரை எனுமோர் அரக்கி.

 நிழலைப் பிடித்தே இழுக்கும் சக்தி கொண்ட அவள்,
பறக்கும் அனுமனை அவ்வாறே கீழே இழுத்தாள்.
"அடே என்னைக் கடந்து செல்வதார்" என வினவி,
அனுமனை விழுங்க தன் வாயைப் பிளந்தாள்.

அரக்கியின் வாய் வழியே நுழைந்த அனுமன்
அவளது வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான்.

அரக்கியும் அத்தோடு மாண்டிட,
தேவர் முதலானோர் அனுமனை வாழ்த்திட,
வீரன் விண்ணில் பறந்தான்.

14. இனிமேலும் இடர்கள் வாராமல் இருக்க
இனியதோர் உபாயம் இராம நாமம்
உச்சரிப்பதே எனத்தெளிந்து இராம நாமம்
செபித்தாவாறே பறந்தான் ஆஞ்சநேயன்.

15. இப்படியாக அனுமன் இலங்கை மூதூர் நகரில்
இலம்பகம் என்னும் பவழமலையில் வந்து இறங்கினான்.
இறங்கியபோது புயலில் சிக்கிய மரக்கலம் போலும்
ஆட்டம் கண்டு பின் நின்றது அம்மலை. அங்கிருந்து
அனுமன் இலங்கை நகர் தெரியக் கண்டான்.

2 comments:

  1. காட்சிகள் கண் முன்னே தெரிந்தன... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    அருமையான வரலாற்றுக் காவியம் படிக்க படிக்க திகட்ட வில்லை பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete