Sunday, December 04, 2011

மெய்ப்பொருளின் சாயை

மகா காளியின் புகழ்
ராகம்-ஆனந்த பைரவி                                                                  
தாம்-ஆதி

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி என்றபெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவுமொரு வண்டு-தழல்

காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்
கால்கள் ஆறுடையதெனக் கண்டு-மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.

மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ

வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்தம் எந்தனேழை யுள்ளம்

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலாம் அவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண்டு உய்கை-அவள்

ஆதியாய் அநாதியாய் கண்டவறி வாவளுன்தன்
அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்
ஆனந்தத்தின் எல்லை அற்ற பொய்கை.

இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலாம் அவள்புரியம் மாயை-அவள்
ஏதுமற்ற மெய்ப் பொருளின் சாயை-எனில்

எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த
எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை.

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கும் எங்குமுள வாகும்-ஒன்றே
யாகினால் உலகனைத்தும் சாகும்-அவை

அன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.

நீதியாம் அரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த
நெறியுமெய்துவர் நினைத்தபோது-அந்த

நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கு இல்லையோர் தீது-என்றும்
நேர்மைவேதம் சொல்லும்வழி யீது.

மகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்:
1. எம்.எஸ் அம்மா
2. ராஜ்குமார் பாரதி 

ஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்!
பாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ!
அங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே!
எனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே!

மெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்:
சக்தியவள் இல்லாத பொருளுமில்லை.
சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை.
இதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்!
எல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும்.

1 comment:

  1. ஆறு காலுடைய காளியை
    அவள் அற்புத சக்தியதனை
    ஆனந்த பைரவி ராகத்தி
    லடக்கியாள் நினைக்கும் எம்.எஸ்
    அம்மாவின் திறன் தான் என்னே !!!

    காளி நிற்பாளா என்ன !! நம்
    கண்கள் காணாவிடமெல்லாம் நிறைந்தவளே ! நம்
    காதுகளும் பிறவிப்பயன் பெற நினைத்தாளோ !!

    ஆனந்த பைரவியில் துவங்கியது எனினும்
    அனைத்து ராகங்களும்
    இணைத்து ஓர்
    இராக மாலிகை அல்லவா
    கேட்கிறோம் !!!

    அற்புதம் !! அற்புதம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete