Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.

8 comments:

  1. சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட//

    :)))))))))))))))

    ReplyDelete
  2. ஆத்திகத்தின் மூலதனமே நிதானம் தானே.

    ReplyDelete
  3. வாருங்கள் கீதாம்மா மற்றும் ராஜவம்சம்,
    வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  4. அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது --

    சிறுமிக்குப் புரிந்தது-ஆசிரியருக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  5. :)))

    //சிறுமிக்குப் புரிந்தது-ஆசிரியருக்குப் புரியவில்லை.//

    அதேதான்!

    ReplyDelete
  6. தங்களின் இந்தப் படைப்பும், சொல்ல வந்த கருத்தும், சொல்லிய விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தங்களின் துணிச்சல் மிகுந்த இந்த அணுகுமுறைக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ராஜேஸ்வரி மேடம் மற்றும் கவிநயாக்கா,
    வருகைக்கு நன்றிகள்!

    வை.கோ ஐயா,
    வாழ்த்துகளுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  8. அப்படி போடு.
    என் சித்தப்பா நாத்திகர். நான் சிறு வயது முதல் நெற்றி நிறைய திருநீறைப் பூசி இருப்பேன். அவர் என்னிடம் நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா என்றார், நான் சொன்னேன். பார்க்கவில்லை. ஆனால் பார்க்கப் போகிறேன் என்றேன்.

    ReplyDelete