Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

8 comments:

  1. மானும், மயிலும் ஆடறதைப் பார்த்துட்டு ஓட்டமாய் ஓடி வந்தேன். அழகு, வெகு அழகு, இந்த ஆடிக்கொண்டார் பாடல் நீங்க போட்டிருக்கீங்க, அதிசயம் என்னன்னா, யாமினி கிருஷ்ணமூர்த்தியின் அபிநயத்தோட சிதம்பரத்தில் நிருத்ய சபையிலும், சிவகங்கைக்கரையிலும் எடுத்த குறும்படம் வெள்ளியன்று தான் தூர்தர்ஷன் பாரதியில் பார்த்தோம். சில முக்கியமான அபிநயக் காட்சிகளைப் படமும்பிடித்து வைத்தேன். இன்னும் அப்லோட் பண்ணவே இல்லை. அருமையான ஆட்டம்னு சொன்னால் அது வெறும் புகழ்ச்சி. எல்லாத்துக்கும் மேலே அந்த அலங்காரம், முகபாவனை, மூகத்திலும், உடலிலும் இந்த உடல்மொழினு சொல்வாங்களே அதில் ஆணின் பாவனையைக் கொண்டு வந்த லாகவம்! அசத்தல்!

    ReplyDelete
  2. வாங்க கீதாம்மா,
    பாட்டுக்கு ஒரு நல்ல நாட்டிய ஒளிக்காட்சியை போடலாமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பை நிறை செய்யும் வண்ணம் நாட்டிய குறும்படம் பற்றிச்சொன்னீர்கள். நன்றிகள்.
    யாமினி கிருஷ்ணமூர்த்தி என்றதும், முன்னம் வெங்கட் சாமிநாதன் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  3. படிச்சிருக்கேன் ஜீவா, இந்த நிகழ்ச்சி தானோனு நினைக்கிறேன். ஏனெனில் டைட்டிலில் திரு வெங்கட் சுவாமிநாதனின் பெயரைப் பார்த்த நினைவு. மீண்டும் எப்படியும் ஒளிபரப்புவாங்க, காலை நேரங்களிலே அப்போப் பார்க்கிறேன். வெங்கட் சுவாமிநாதனின் இந்தப் பேட்டியையும் படித்திருக்கேன். அவரே லிங்க் கொடுக்கிறார் மின் தமிழில். :))))))

    ReplyDelete
  4. பதஞ்சலியோட ஸ்லோகத்துக்கு அவங்க ஆடிய ஆட்டம் மறக்கவே முடியலை என்னால்! எத்தனையோ ஜென்மங்களில் செய்த தவம், புண்ணியம் இப்படி ஒரு கலை! கலை அவங்களை ஆள்கிறதா? அவங்க கலையை ஆட்டுவிக்கிறாங்களானு சொல்றது கடினம். அங்கே ஈசனைத் தவிர வேறு எவரும் கண்ணில் படவில்லை என்பது நிஜம்! நிகழ்ச்சி முடிந்ததும் தான் சுய உணர்வுக்கே வந்தோம்!

    ReplyDelete
  5. //"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!//

    ஆஹா! நடராஜர் பத்து படிக்கையிலேயே அந்த திருஆடல் காட்சி சுகானுபவமாய் சிந்தையில் படிந்து கண்களை நிறைத்தது.

    அந்த 'ஆடிக்கொண்டார்' பாடலும்
    'அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்' பாடலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

    இறையனுபவத்தை தேனூற்றாய் வாரி வழங்கியமைக்கு மிக்க நன்றி,ஜீவா!

    ReplyDelete
  6. /அங்கே ஈசனைத் தவிர வேறு எவரும் கண்ணில் படவில்லை என்பது நிஜம்! //

    ஆகா, அருமை, அது புண்ணியம் தான்!

    ReplyDelete
  7. வாங்க ஜீவி ஐயா,
    நன்றிகள்!

    ReplyDelete
  8. Anonymous12:59 AM

    ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லை வாழ் நடராசனே

    ReplyDelete